இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுகிறது.-- எம்.பி இம்ரான் மகரூப் தெரிவிப்பு

4 months ago




இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது-

முஸ்லிம் மக்களும் இந் நாட்டின் பிரஜைகள். அந்த வகையில் இந்த சமூகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந் நாட்டில் வாழ விரும்புகின்றது.

இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த                 அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதி நிதித்துவம் இருந்து வந்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது.

சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய காலச் செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும்போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை.

இந்த விடயம் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல இந்த அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற்ற 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டி யல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை.

பின்னர் இதுவும் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது.

அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது - என்றார். 

அண்மைய பதிவுகள்