இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

7 hours ago



இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமெராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது 08 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் 30 குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் பொலிஸ் பாதுகாப்பு கமெராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டிலிருந்து வரும்போதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கூறினார்.

இதன் மூலம் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள்.

முக அங்கீகார பாதுகாப்பு கமெராக்கள் அனைத்து கவுண்டர்களிலும் பொருத்தப்படும் வரை, தற்போது அந்த கமெராக்கள் பொருத்தப்பட்ட கவுண்டர்களை முடிந்தவரை பயன்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.