புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அவசியம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எம்.பி பொ.கஜேந்திரகுமார், எம்.பி சி.சிறிதரனுக்குமிடையே கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அவசியம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எம்.பி பொ.கஜேந்திரகுமார், எம்.பி சி.சிறிதரனுக்குமிடையே கலந்துரையாடல்
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக் கொண்டு அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங் காலங்களிலேனும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.
அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இத் தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்தும், அதற்கு அப்பாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இது பற்றிக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சிநேக பூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.30 மணியளவில் சிறிதரனின் இல்லத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை இலக்காகக் கொண்டு அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
அதேபோன்று தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை கஜேந்திரகுமார் சிறிதரனிடம் கையளித்தார்.
அத்தோடு ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் பற்றி இதன்போது சிறிதரன் எடுத்துரைத்தார்.
அத்தோடு தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை ஒரு பொது வேலைத் திட்டத்தின் ஊடாக அணுக வேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாடு தொடர்பில் இங்கு இரு தரப்பினரும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
