தமிழ் மக்களின் விவசாய நிலங்களை, தொல்பொருள் துறையானது தமது தொல்பொருள் இடங்களாக கையகப்படுத்துகிறது

3 months ago



தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை, தொல்பொருள் துறையானது தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது.

இவ்வாறு இலங்கைத் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த ஆண்டு தொடங்கி பத்து நாள்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் வட்டவான் கிராமசேவர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது.

அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற் களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தொல்லியல் துறையானது, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராம சேவையாளர் பிரிவில் உள்ளடங்கும் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட உறுதிகளைக் கொண்ட, 150 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்ற, அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது.

இதனை விடவும், மேலும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரபுஅடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, ஜாயாநகர், கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரியகுளம் முதலிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக் கற்களை இட்டுப் பிடித்து வைத்துள்ளது.

இந்தச் செயலானது, நெல் உற்பத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

இது மட்டுமல்லாமல் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும். இராஜவந்தான் மலை முருகன் கோயில், கூனித்தீவு மத்தளைமலை முருகன் கோயில், கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயில் அதேபோன்று, சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், திருமங்கலாய் சிவன் கோயில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில் மற்றும் கல்லடிமலை நீலியம்மன் கோயில் அதேபோன்று, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்கும், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், தென்னமரபுஅடி கந்த சாமிமலை முருகன் கோயில், குச்சவெளி செம்பிமலை சிவன் கோயில் மற்றும் வழத்தான்மலை நாகதம்பிரான் கோயில் முதலிய சைவ கோயில்களையும் அவற்றைச் சூழவுள்ள விவசாய நிலங்களையும் கையகப்படுத்துகின்ற முன்முயற்சிகளில் தொல்பொருள் துறை ஈடுபட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதற்கு மேலாக, இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது.

இந்தப் பகுதியில் ஒரு வாழை மரத்தை நடக்கூட தொல்லியல்துறை தடை விதிக்கின்ற அதேவேளை, இங்கு 58 சட்டவிரோத கடைகள் கட்டியிருப்பது பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.

பல வேளைகளில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இது ஒரு இனவாத போக்கை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.

தொல்பொருள்துறை மட்டுமில்லாமல், அரசின் மற்றுமொரு அங்கமான வனத்துறை, திருகோணமலை மாவட்டத்தில், 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், போரின்போது மக்கள் உயிர் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்த வேளையில், மக்கள் விவசாயம் செய்த 41,361 ஏக்கர் நிலத்தைத் தமது மனம் போன போக்கில் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.

காணியினுள் செல்லவோ அல்லது விவசாயம் செய்யவோ விடாமல் தடுத்து வருகின்றது.

இது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலைப் பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

இதேபோன்று வனவிலங்கு துறையானது. கால்நடை வளர்ப்பாளர்கள் பல தலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்களை, அவர்கள் போரின்போது இடம்பெயர்ந்த வேளையில், எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இந்த நிலங்களில் காட்டு விலங்குகள் மட்டுமே மேயலாம். வீட்டு விலங்குகள் மேய முடியாது என்று தடுத்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான கால் நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன.

ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 600 கால் நடை வளர்ப்பாளர்கள் தமது 28,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றி இன்னல் படுகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பையே தமது வாழ் வாதாரமாக கொண்டவர்கள்.

இத்தகைய சிக்கல் தம்பலகாமம், குச்சவெளி, கிண்ணியா, மூதூர் மொற வெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, துறைமுக அதிகார சபையானது, திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 11 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 5,572 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி வைத்திருக்கின்றது.

இந்தப் பகுதிக்குள் வாழும் 763 குடும்பங்கள் தமது குடியிருப்பு காணிகளில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது இருக்கின்றனர்.

விவசாய நிலங்களில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத சூழலும் காணப்படுகின்றது.

இலங்கை அரசு உணவு உற்பத்தியை பெருக்குமாறு கூறுகின்ற அதேவேளை அரசின் அங்கங்களான தொல்பொருள்துறை, வனவிலங்குத் துறை, துறைமுக அதிகாரசபை முதலியன விவசாய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் உணவு உற்பத்தினை குறைத்தும் வருகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மட்டுமன்றி, முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2,172 ஏக்கர் நிலத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு, மக்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த விடயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தித் தொல்பொருள் துறை, வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை, புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அதன் வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியைப் பெருக்கவும் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.- என்றார்.

அண்மைய பதிவுகள்