சுயநிர்ணய உரித்து அங்கீகரிக்கப்பட்டால் உங்களோடு இணைந்து பயணிக்கத் தயார்.--எம்.பி சிறீதரன் தெரிவிப்பு

புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் இனவாதமற்ற இலங்கை நாட்டில் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப் பங்காளர்களாக பயணிக்கத் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில்-
இலங்கையில் இனவாதத்தை எவரும் பேசக் கூடாது என ஆளுங்கட்சியினர் வலியுறுத்துவது எமக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
எண்பது ஆண்டுகளின் முன்பிருந்த இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இத்தகைய மனநிலை இருந்திருந்தால், தமிழினம் அடக்கப்பட்ட இனமாக, இனவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட இனமாக இத்தனை துயரங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
கடந்த காலங்களில் தமிழர் தரப்பால் அரசாங்கங்களோடு மேற்கொள்ளப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தைகளும் எமக்கு சாதகமாக அமையவில்லை என்ற நம்பிக்கையீனங்களைக் கடந்து, புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் இனவாதமற்ற இலங்கை நாட்டில் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப்பங்காளர்களாக பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.
இடதுசாரிக் கொள்கை அடிப்படையில் வளர்ச்சி கண்ட ஜே.வி.பியினரிடத்தே அடக்குமுறை இருக்காதென்றும், ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந் தெழுகின்ற மார்க்சிசமும், லெனினிசமும், சேகுவேரா, மாவோ சேதுங் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைப் போக்கும் மேலோங்கியிருக்க வேண்டும் என்றுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் சிந்திய இரத்தமும், செய்த தியாகமும் இன்று உங்களை இந்த சிம்மாசனத்தில் ஏற்றியிருப்பதைப் போல, ஈழவிடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்களும், மக்களும் செய்த உயிர்த்தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் எங்கள் இனத்தின் இருப்பை உறுதி செய்யும் நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
