பொறுப்புக்கூறல் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசின் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

6 hours ago



பொறுப்புக்கூறல் விவகாரத்தில் உள்ளகப் பொறி முறையை வலுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதப் பிரேரணை அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இது சம்பந்தமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடனும் கொழும்பு பேச்சு நடத்தவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.

26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ள வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர். நீதி அமைச்சர் ஆகிய அரச தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல்களில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்புக்கான ஏற்பாடு, புதிய அரசியலமைப்பு.உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளருக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை உடன்படாது என்பதால் உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், உறுப்பு நாடுகளிடம் இது பற்றி கோரிக்கை விடுக்கப்படவேண்டும் எனவும் இலங்கை தரப்பில் கோரப்படவுள்ளது அறியமுடிகின்றது.

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையொன்று மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாத கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவுள்ள நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சு நடத்தவுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, ஊழல்வாதிகளுக்கு எதிரான பாரபட்சமற்ற நடவடிக்கை என்பவற்றின் ஊடாக உள்ளக முறை வலுப்படுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

இலங்கைப் பயணத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர், சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இந்தப் பயணத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராய உள்ளதுடன், போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கவுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வடக்கு, கிழக்கு செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது அவர்கள் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தவுள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழி, காணி ஆக்கிரமிப்பு, வழிபாட்டுதல ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைக்கவுள்ளனர்.

இலங்கைப் பயணத்தில் சந்திப்புகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றையும் நடத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளராக பதவிவகித்த நவநீதம்பிள்ளை அம்மையார், இதற்கு முன்னர் இலங்கை வந்திருந்தார். அப்போது அவர் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முற்பட்டார் எனவும், அந்த கோரிக்கையை மஹிந்த அரசாங்கம் நிராகரித்தது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மைய பதிவுகள்