இலங்கைக்கான பிரிட்டன் துதுவர் ஆண்ட்ரூபேட்ரிக்கை நாளை எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேசவுள்ளார்

இலங்கைக்கான பிரிட்டன் துதுவர் ஆண்ட்ரூபேட்ரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கின் அழைப்பின் பேரில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், அரசின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கின்றது.
இந்நிலையில், அந்தத் தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் தற்போதைய நிலவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறியவுள்ளார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
