அரியாலை செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும் -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

"அரியாலை மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரியாலை சிந்துப்பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளி வந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விடயம் என்றும் கூறியுள்ளார்.
அரியாலை புதைகுழி விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு,
குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்தமை தொடர்பில் அறிய கிடைத்ததும் நாங்கள் சென்று பார்வையிட்டோம்.
அங்கு காணப்பட்ட எச்சங்களை பார்க்கும்போது எங்கிருந்தோ கொண்டு வந்து புதைக்கப்பட்ட எச்சங்களாக பாகங்கள் கலக்கப்பட்டவையாக காட்சியளித்தன.
இந்நிலையில் யாழ்ப்பாண நீதிமன்றம் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பது நம்பிக்கை தரும் நிலையில், தேவை ஏற்படின் சர்வதேச தரத்திலான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் யுத்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரமாட்டோம் உள்ளக விசாரணைகளே நடைபெறும் எனக் கூறிவரும் நிலையில் குறித்த புதைகுழி யுத்த காலத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித எச்சங்களாக இருக்கலாம் என நாம் சந்ததிக்கிறோம்.
ஆகவே, தற்போதைய அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறோம்.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான நம்பகத்தன்மையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
