இலங்கை அரசு வடக்கு - கிழக்கு விவசாயிகளின் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை - எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

2 months ago



அரசாங்கம் வடக்கு - கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.

பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகள் மீது கருணை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.

விவசாயிகள் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்திக்கின்றனர்.

எனினும் தமது பாதிப்புக்கு நியாயமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அதேநேரம் அரசாங்கம் விவசாயிகளின் நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் நிலையில் அவரது சிந்தனை இருக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பொறுப்பான அமைச்சர் நெல்லின் நிர்ணய விலையை அறிவிப்பதாக கூறுகின்ற அதே நேரம், அநுராதபுரம் மற்றும் ஏனைய பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்னரே நெல்லுக்கு நிர்ணய விலையை தாம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் உள்ள விவசாயிகள் மாத்திரமே விவசாயிகள் என்றும் வடக்கு - கிழக்கில் உள்ள விவசாயிகளை விவசாயிகள் போல் தெரியவில்லையா?

நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் குறைவாக நிர்ணயிக்க உள்ளதாக அறிகிறோம்.

இதனால் விவசாயிகள் விவசாயத்திற்காக செலவு செய்த முதலீடுகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

எனவே அரசாங்கம் விவசாயிகள் நட்டத்தை எதிர்நோக்காத வகையில் கூடிய விலை நிர்ணயத்தை தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் ஏனைய தனியார் நெல் கொள்வனவு செய்கின்றவர்கள் அரசாங்கத்தை விட மிகவும் குறைவாகவே நெல்லை பெற்றுக் கொள்ள விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

எனவே கூடிய அளவிலான விலையை நெல்லுக்கு அரசாங்கம் தீர்மானிக்கின்ற போது தனியார் நெல் கொள்வனவு செய்கிறவர்களும் கூடுதலான விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வார்கள்.

விவசாயத்துக்காக விவசாயிகள் வங்கிகளில் கடனைப் பெற்றும் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும் பணத்தை பெற்று விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள விவசாயிகளை நாங்கள் தூக்கி விடுவதாக இருந்தால் அவர்களின் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

எனவே புதிய அரசாங்கம் சாக்குப் போக்கு கூறாமல் நெல்லின் விலையை நிர்ணயம் செய்து அழிவில் இருந்து கொண்டுள்ள விவசாயிகளை தூக்கி விடவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது -என்றார். 

அண்மைய பதிவுகள்