யாழ். அராலியில் தாயையும் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் தாயையும் அவரின் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கணவனை பிரிந்த பெண்ணும் அவரது மகனும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதன்போது பளை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அராலி பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு வந்திருந்தபோது, அவருக் கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அங்கு தங்கியிருந்த சில மாதங்களின் பின்னர் அந்த வீட்டினை தனது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டு குறித்த பெண் மீதும், அந்தப் பெண்ணின் மகனான சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தி வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது தாக்குதலால் அந்த பெண்ணுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டு மனநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் தனது தாக்குதல் மூலமே அந்த பெண்ணுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அயல்வீட்டாருக்கு கூறியுள்ளார்.
இதன்பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிறுவன் மீதும் தாக்குதல் நடத்தி, சிறுவனை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
குறித்த சிறுவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த வேளை, அந்த சிறுவனை மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன்போது, அந்த சிறுவனை சிறுவர் இல்லத்தில் சேர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் பளைப் பகுதியில் தலைமறைவாகி இருந்த குறித்த நபர் மீண்டும் நேற்றையதினம் அராலி பகுதிக்கு வந்திருந்த வேளை வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது அவர் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
