இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

2 days ago



இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 5 குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதியரசர்கள் குமுதினி விக்கிரமசிங்க, அச்சலா வெங்கப்புலி, மேனகா விஜயசுந்தர ஆகியோரடங்கிய அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை ஒருமனதாக நிராகரித்து தள்ளுபடி செய்தது.

வழக்கின் முதல் குற்ற வாளியான சோமரட்ண ராஜபக்ஷ உட்பட தண்டனை அனுபவித்து வரும் ஐந்து குற்றவாளிகள் தாங்கள் பல வருடங்களாக மரண தண்டனை கைதிகளாக உள்ளனர் என்று கூறி அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடூரமானது மற்றும் மனிதாபிமான மற்றது. எனவே, மரண தண்டனை நிறைவேற்றப்படாது விட்டால் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் அல்லது விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று குற்றவாளிகள் அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை குற்றவாளிகளின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டிசில்வா தாக்கல் செய்திருந்தார்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கடுமையாக எதிர்த்தார்.

"பொது மன்னிப்பு வழங்குவது என்பது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் விருப்பமே. எந்தவொரு குற்றவாளியும் அதனை சட்டபூர்வ உரிமையாக கோர முடியாது. பொது மன்னிப்பு விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது. மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர்”, என்று சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

ஆட்சேபனைகளை ஏற்ற 3 நீதியரசர்களின் அமர்வு, இந்த மனு காலக்கெடுவுக்கு உட்பட்டது.

மனுதாரர்கள் நல்லெண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயல்படவில்லை", என்று சுட்டிக்காட்டி, குறித்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

கிருஷாந்தி குமாரசாமி 1996 செப்ரெம்பர் 7ஆம் நாள் 6 இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷாந்தியை தேடிச் சென்ற அவரின் தாயார், தம்பி மற்றும் அவரின் அயலவரும் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இவர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டன.

இந்த படுகொலைகள் தொடர்பில் 1998ஆம் ஆண்டு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் 5 நீதியரசர்கள் அமர்வும் குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதி செய்திருந்தது.


அண்மைய பதிவுகள்