ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கும் கலாநிதி ம.சண்முகலிங்கம் (குழந்தை ) நேற்று(17) தனது 93வது வயதில் காலமானார்.

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் (குழந்தை ) அவர்கள் நேற்று(17) தனது 93வது வயதில் காலமானார்.
இவர் 1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி திருநெல்வேலியல் பிறந்தவர். நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில் வளர்ந்தவர்.
இங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ், சிங்களம் மூன்று மொழிகளிலும் புலமையுள்ளவர். நுற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை.
இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது.
ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் இணைந்து பணியாற்றியவர்.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.
யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதல்முதலில் மேடையேறுகிறது.
இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பிக்கிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45வது வயதில் பெற்றுக் கொள்கிறார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியை உருவாக்கியவர்.
உலகப் புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர் பயிற்சியை வழங்கியவர்.
நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக் கற்றறிந்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.
ஜீ.சி.ஈ உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது.
இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அதற்கு மூல காரணமானவர் குழந்தை ம.சண்முகலிங்கம்.
மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆய்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணிமுக்கியமானது.
ஆசிரியர்களுக்கான நாடகக் களப் பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர்.
இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு. தனது ஆசியர் பணி நிறைவடைந்ததும் இவர் நாடகத்துறையில் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க ஆரம்பித்ததன் வழியாக நீண்ட மாணவர் பரம்பரையைக் கொண்டிருக்கிறார்.
இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக்கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன.
தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
இவரது நாடகப் பணியைப் போற்றி கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு கொளரவ கலாநிதி பட்டடம் வழங்கி கெளரவித்துள்ளது.
இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பெரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.
இவரது பணியை கொளரவிக்கும் முகமாக இவரது உடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட வேண்டும் என்று கலை ஆர்வலர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
