
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் ஒரு மாணவனுடைய பேனாவை சுவரில் எறிந்துள்ளனர். பேனா உடைந்த நிலையில் இருந்ததால் சம்பந்தப்பட்ட மாணவர்களை பொறுப்பாசிரியர் ஒருவர் விசாரணை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆண் ஆசிரியர் நடந்தவற்றை கூறுமாறு மாணவனை கேட்டதற்கு, அங்கு நடந்த சம்பவத்தை மாணவன் தெரிவித்த நிலையில் அவரை இழுத்துச் சென்று கன்னத்தில் தாக்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு காது பகுதி வலி காரணமாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு வினவியபோது பாதிக்கப்பட்ட மகன் நேற்று (27) யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், ”மகனை தாக்கிய ஆசிரியர் இவ்வாறு பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது வழமை என்றும் எனது பிள்ளை கீழே இருந்த பேனாவை எடுத்து சென்ற நிலையில் பேனா அவ்வாறு உன்னிடம் வந்தது என கேட்டு, குறித்த ஆண் ஆசிரியர் சீருடையை பிடித்து இழுத்து அவரின் கன்னப் பகுதியை தாக்கியதாக எனது மகன் தெரிவித்தார்” என பெற்றோர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பிள்ளைக்கு இடம்பெற்ற சம்பவம் போல் இனி சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, குறித்த ஆசிரியர் மீது பொலிசஸார் நடவடிக்கை எடுத்ததாக தான் அறியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
