முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை மீட்டுத்தரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

2 months ago


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் தண்ணி முறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருப்பதால் குறித்த காணியை மீட்டுத்தரக்கோரி நேற்றுக் காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யுத்த காலத்துக்கு முன்னர் நீண்ட காலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றம் வந்தபோது தனியார் ஒருவர் சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார்.

இந்நிலையில் பின்னர் உரிய முறைப்படி பிரதேச செயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனி நபரை வெளியேற்ற முடியாத நிலையில், நேற்றுக் காலை பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் மீண்டும் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊர்மக்கள், பாடசாலைச் சமூகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை குரல், சட்டம் எம்மை கைவிட்டுவிட்டதா? பக்கச்சார்பற்ற தீர்வை தாருங்கள், கல்வி என்பது சம உரிமை அவை எமக்கு மட்டும் கிடைக்காதது ஏன்? திறமை உள்ள எமது கல்வியை தட்டிப்பறிக்காதீர்கள்! போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு தற்காலிக கொட்டகை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.