மன்னார் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான 5 பேருக்கும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

2 months ago



மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தின் முன்பாக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன்,பெண் ஒருவர் உள்ளடங்களாக மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் தொடர்ச்சியாக சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23) மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளி குறித்த கொலைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேகநபர்கள் மூவர் உள்ளடங்களாக 4 நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

அண்மைய பதிவுகள்