ஈரான் பொப் இசைப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

2 months ago



ஈரானைச் சேர்ந்த பிரபல பொப் இசைப் பாடகரான அமீர் உசைன் மக்சவுத்லூவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

37 வயதான அவர் ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து அடிக்கடி வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார்.

மேலும், நபிகள் நாயகத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அதுமட்டுமல்லாது விபசாரத்தை ஊக்குவித்தல், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தமை உள்ளிட்ட வழக்குகளும் அவருக்கு எதிராகத் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் தேடப்பட்ட பாடகர் அமீர் உசைன் 2018 ஆம் ஆண்டிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்த நிலையில் துருக்கி பொலிஸார் அவரை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானிடம் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் ஈரானில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையின்போது, பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.