வட இந்தியாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த கூட்ட நெரிசலின் உயிர் இழப்புகள் முழுமையாக வெளிவரவில்லை











வட இந்தியாவில் நேற்று (29) மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அங்கு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள வைத்தியர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் நிலவரம் குறித்து விசாரித்தனர்.
பிரதமர் மட்டும் ஒரு மணி நேரத்துக்குள் இரண்டு முறை யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சங்கம் காட் பகுதியின் முகத்துவாரத்தை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தி மொழியில் அவர் பகிர்ந்த அந்த சமூக வலைதளப் பகிர்வில், “அன்பான பக்தர்களே பிரயாக்ராஜுக்கு வாருங்கள், கங்கையில் நீராடுங்கள், சங்கம் காட் முகத்துவாரம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள்.
நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழையுங்கள்.
சங்கத்தின் அனைத்து காட்களிலும் மக்கள் நிம்மதியாக புனித நீராடி வருகின்றனர்.
எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.” என்று கோரியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13 ஆம் திகதி மகா கும்பமேளா விழா தொடங்கியது.
அங்கு திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக நாடு முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் 7 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
இதையொட்டி மகா கும்பமேளாவில் நேற்று (29) 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (புனித நீராடல்) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘திரிவேணி யோகம்’ என்ற வானியல் தினமான இன்று அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந் நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
