13ஆவது திருத்தத்தில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை.-- கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிப்பு

3 months ago



அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்கள் தமக்குக் கிடைத்த உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற தமிழர் விழாவில் கலந்துகொண்ட அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் முக்கியமான விடயமாகும்.

தமிழ் மக்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை தமக்குக் கிடைத்த உரிமையாகக் கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அதனடிப்படையில்தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம்.

அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச் சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13ஆவது திருத்தச் சட்டத்தினையும், மாகாணசபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிர்வாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப் பார்ப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் - என்றார்.


அண்மைய பதிவுகள்