வவுனியாவில் பிரபல பீசா விற்பனை நிலைய கட்டடம், முரணாக அமைக்கப்பட்டதாக நகர சபையால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரபல பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகர சபையால் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர சபை கட்டளைச் சட்டங்களின் பிரகாரமும், நகரப் பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகர சபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.
எனினும், குறித்த ஆதனத்தில் நகர சபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாகக் கட்டடம் அமைக்கப்பட்டு வணிக ரீதியிலான நோக்கத்தில் இந்தக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நகர சபைக்குச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அந்த வகையில் திருத்திய வரைபடத்துக்கான கட்டட அனுமதி. அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கான குடிபுகு சான்றிதழ், சுற்றுச் சூழல் உரிமம், வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபையால் கோரப்பட்டிருந்தது.
எனினும், அது சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் 7 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை வழங்குமாறு கடந்த 5ஆம் திகதி சபையின் செயலாளரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்படத் தவறின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திருத்தச் சட்டங்களின் பிரிவுகளை மீறி நகர சபையின் அனுமதிப் பத்திரத்துக்கு முரணாகக் கட்டடம் அமைத்துச் செயற்படுவதாகக் கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
