கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதாக எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை விவகாரத்தில், தமிழர் தரப்புக்கு கனடா ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு இரங்கல் தெரிவித்தமை, இனப்படுகொலை விவகாரத்தில் தமிழர் தரப்புக்கான ஆதரவு நிலைப்பாடு என்பவற்றுக்காகக் கனேடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக நன்றி தெரிவித்துள்ளார்.
கனடாவில் தமிழ் இனப்படுகொலைத் தூபி அமைத்தமைக்கு பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (23) கருக்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றேன். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை இடம்பெற்று ஒன்றரை தசாப்த காலம் கடந்திருக்கின்றது. பதினாறு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.
இத்தகைய சூழலில் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை என்னும் பேரவலத்தை - நெருப்பாற்றை கடந்து எஞ்சிய உறவுகள் இறுதிப் போரின் வடுக்களோடும், போரின் கொடுமையான நினைவுகளைச் சுமந்தும் இறுதிப் போரின் சாட்சியாக, தமிழ் இனப் படுகொலையின் ஆதாரங்களாக எமது மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.
தமக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழினப் படுகொலையை மேற்கொண்டவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது உறவுகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இருப்பினும் தமிழினப் படுகொலை இடம்பெற்று ஒன்றரை தசாப்த காலங்கள் கடந்துவிட்ட போதிலும் எமது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எமது மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மற்றும், அநீதி இழைப்பதற்குத் துணை நின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வருடந்தோறும் மே-18 அன்று, எமது உறவுகள் தமிழினப் படுகொலையை நினைவு கூருகின்றனர். இதன் மூலம் தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோருகின்றனர்.
அத்தோடு தமிழினப் படுகொலையை மேற்கொண்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறாக கடந்த 16 ஆண்டுகளாக எம் உறவுகள் நீதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில்தான் கனடாவின் பிரம்டன் நகரத்தில் சிங்க்கௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையை நினைவு கூரும் வகையிலான தமிழ் இனஅழிப்பு, நினைவுத் தூபி கடந்த 10 ஆம் திகதி பிரம்டன் நகரத்தின் மேயர் பற்றிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 16 ஆண்டுகளாக தமிழ் இனப் படுகொலைக்கான நீதியைக் கோரிக் கொண்டு, காத்துக்கொண்டிருக்கும் எமது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு கனடாவின் இந்தச் செயற்பாடு புதிய தெம்பைத் தருவதாக அமைந்துள்ளது. நீதி கிடைக்குமா? என்று ஏங்கியிருக்கும் எமது உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.
இந்த நிலையில் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு கனேடியப் பிரதமர் மார்க்கார்னி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எமது துயரில் பங்கேற்று ஆறுதல் சொன்ன கனேடியப் பிரதமர் மார்க் கார்னிக்கு வலிசுமந்த மக்களின் பிரதிநிதியாக இந்த உயரிய சபையில் தலைசாய்த்துக் கொள்கின்றேன்.
மேலும் தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை பொறுப்பேற்கச் செய்வதிலும், உண்மை, நீதி கிடைப்பதற்கும் சர்வதேச அளவிலான முயற்சிகள் மற்றும், நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்ற செய்தியானது அவலத்தில் இருந்து மீண்ட எமது மக்களை பேராறுதல் அடையச் செய்கின்றது.
கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம். எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தாருங்கள் என இந்த உயரிய சபையிலிருந்து கனேடியப் பிரதமர் மார்க் கார்னியிடம் எம் மக்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கின்றேன்.
தமிழ் இன அழிப்பு விடயத்தில் கனடா எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியதை வரவேற்பதுடன், கனேடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும், பிரம்டன் நகரமேயர் பற்றிக் பிரவுணுக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். - என்றார்.