இலங்கை வரவு – செலவுத் திட்டம் 2025 ஜனாதிபதியின் உரை

2 months ago



இலங்கை வரவு – செலவுத் திட்டம் 2025 ஜனாதிபதியின் உரை

கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தினை இப் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

சுதந்திரத்திற்குப் பின்னர் 2022 ஆம் ஆண்டில் நாடு மிகவும் சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது.

2022 ஆம் ஆண்டில் நெருக்கடி ஏற்பட்டாலும், நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் வரலாற்று மற்றும் கட்டமைப்பு ரீதியானவை ஆகும்.

இக்குறைபாடுகள் குறுகிய பார்வை கொண்ட ஆட்சி மற்றும் மோசமான பொது நிதி முகாமைத்துவத்தினால் மேலும் அதிகரித்தன.

இந்த நெருக்கடியானது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் இயல்பு நிலையை சீர்குலைத்ததுடன் வியாபாரங்கள் முதல் வீடுகள் வரை அனைத்து துறைகளிலும் காணப்பட்டது.

எரிபொருள், மின்சாரம் அத்தியாவசிய உணவுப் பொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள், சேவைகளில் ஏற்பட்ட பற்றாக்குறையானது, நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் என அனைவரையும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கியது.

அடிப்படைத் தேவைகளைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததுடன், சிலர் வரிசையில் காத்திருக்கும்போது மரணித்தனர்.

2022 ஆம் ஆண்டின் நெருக்கடி வெறும் பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல, அது அரசியல் நிர்வாகம் மற்றும் ஆளுகையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என்பதுடன் இதற்கு முன்னர் எப்பொழுதும் இல்லாதளவிலான துன்பங்களுக்கு வழிவகுத்தது.

பொருளாதாரத்தின் ஆரம்ப வீழ்ச்சி நிவாரணமளிக்கப்பட்டு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளதுடன்,

சமூகத்தின் ஏழ்மையான மற்றும் மிகவும் வலுவற்ற பிரிவுகளைப் பாதித்துள்ளது.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியைத் தாண்டி, இந்நெருக்கடியானது நாட்டில் அரசியல் மாற்றமொன்றினையும் ஏற்படுத்தியது.

தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதாரக் கஷ்ரங்கள் ஊழல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தன.

அவர்கள் அதிகாரத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் வெகுசன போராட்டங்கள் மூலம் விரட்டியடிக்கப்பட்டனர்.

அதன் பிறகு ஒரு தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது, இது மக்களின் ஆணையை சிதைக்கும் செயலாகும்.

இருப்பினும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான மக்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை.

ஏனெனில் இந்த தற்காலிக அரசாங்கத்தின் உருவாக்கம் பெரும்பாலும் பொதுமக்களின் இழப்பில் ஊழல்வாதிகளை மீட்கும் முயற்சியாகும்.

2023 மார்ச் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சனநாயக சட்டபூர்வமான தன்மையில் குறைபாடுகள் வெளிப்பட்டன.

அசைக்க முடியாத உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் 2024 கடைசியில் இடம்பெற்ற சனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முறைமையை

மாற்றுவதன் மூலம் நாட்டை பொதுவான செழிப்பை நோக்கி வழிநடத்தும் வலுவான மக்கள் ஆணையுடன் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.

எனவே, நிலைபேறான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்கி பொருளாதாரத்தை வழி நடத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான அடித்தளமிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்றாக இந்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் நாங்கள் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று, இந்த மகத்தான வெற்றியைத் தடுக்க முயன்றவர்களால் எமது பொருளாதாரக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான கட்டுக்கதைகளையும் தீய பிரச்சாரங்களையும் எதிர் கொண்டமையாகும்.

இலங்கை ரூபாய்க்கு எதிரான டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும், எரிபொருள் வரிசைகளின் சகாப்தம் மீண்டும் ஏற்படும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களும் வெளிநாடுகளும் புதிய அரசாங்கத்தைத் தனிமைப்படுத்துவர், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள், தனியார் சொத்துக்கள் முழுமையாக தேசிய மயமாக்கப்படும் போன்ற தவறான கருத்துக்கள் காணப்பட்டன.

அற்ப அரசியல் நோக்கங்களுக்காக இயக்கப்படுகின்ற கட்சிகளால் உருவாக்கப்பட்ட எமது அரசாங்கத்திற்கெதிரான பிம்பம் மேலதிக தடைகளை ஏற்படுத்தியது.

எமக்கெதிராக இதுபோன்ற எதிர் பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், புதிய சூழ்நிலையினை வெற்றிகரமாக வழி நடத்தவும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் வெளிநாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேணவும், முதலீட்டாளர்களிடையே  நம்பிக்கையை உருவாக்கவும் எம்மால் முடியுமாக இருந்தது.

அதன்படி, விலை மற்றும் நிதித்துறை படிப்படியாக ஸ்திரமடைந்ததுடன், ஒரு வருட அளவீட்டின் படியான திறைசேரி உண்டியல் வீதம் 8.8% ஆகக் குறைவடைந்து, பணவீக்கம் 2025 சனவரியில் 4.0% எதிர்மறையாகக் காணப்பட்டது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் குறிப்பிடத்தக்க அளவிலான கடன் மீள்கொடுப்பனவுக்குப் பின்னர் அந்நிய செலாவணி இருப்பானது 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, நாணய மதிப்பு தேய்மானம் குறித்த விடயங்கள் இருந்த போதிலும் இலங்கை ரூபாவின் மதிப்பு ஒரு டொலருக்கு ஏறக்குறைய 300 ரூபாக வலுவடைந்துள்ளதுடன் 2025 இல் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 நடுப்பகுதியில் இருந்து இலங்கை நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிலையம் மற்றும் பிற சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் பொருளாதார சீர்திருத்தங்களைச்  செயற்படுத்தியது.

சில சந்தர்ப்பங்களில் இந்த தீர்வு நடவடிக்கைகள் மக்கள் மீதான அழுத்தங்களை அதிகரித்தன –

குறிப்பாக செலவு-பிரதிபலிப்பு எரிசக்தி விலை நிர்ணயம், வரி அதிகரிப்பு மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற நடவடிக்கைகளாகும்.

பொருளாதாரத்தை  ஸ்திரப்படுத்துவதில் சர்வதேச நாணய நிதியம் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் பங்கை நாங்கள் அங்கீகரிக்கும் அதேவேளையில், எமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார இறையாண்மையின் வடிவத்தில் பொருளாதாரத்தின் முழு கட்டுப்பாட்டையும் அடைய வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.

பொருளாதாரத்தில் மற்றொரு முக்கிய அம்சமாக, 2024 டிசம்பரில் கடன் மறுசீரமைப்புச் செயன்முறை முடிவடைந்தமையாகும்.

நாம் ஆட்சிக்கு வந்தபோது, இலங்கை பொதுபடுகடனை மறுசீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததனால், அம்முயற்சியில் சடுதியான மாற்றம் ஏற்பட்டால் பொருளாதாரம் சீர்குலையும் என்பதனைக் கருத்திற் கொண்டு, நாம் அதனைத் தடுக்க விரும்பவில்லை.

இந்த முடிவை எடுக்கும்போது, ​​கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஏற்கனவே செலவிடப்பட்ட குறிப்பிடத்தக்க நேரத்தையும் அச்செயன்முறையைத் தொடர்வதால் மக்களுக்கு ஏற்படும் மேலதிகச் செலவுகளையும் நாம் கருத்திற் கொண்டோம்.

இந்தச் செயல்முறையானது இலங்கைக்கு கணிசமான கடன் நிவாரணத்தை வழங்கியுள்ளதுடன், கடன் மீள்கொடுப்பனவு செலவுகளையும் கணிசமாகக் குறைக்கிறது.

ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற வெளிநாட்டு கடன் அல்லாத உட்பாய்ச்சல்களை அதிகரிக்கவும் வெளிநாட்டு நிதியிருப்புக்களை வலுப்படுத்தவும் நாடு இந்த நிதி வாய்ப்பினை பயன்படுத்துவது அவசியமாகும்.

மேலும் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது எதிர்காலத்தில் கடன் மூலதனத்தை திருப்பிச் செலுத்துதல்களை சீராக மீண்டும் தொடங்குவதற்கு உதவும்.

இதன் விளைவாக, பிட்ச் மதிப்பீடுகள் மற்றும் மூடிஸ் (Fitch Ratings and Moody’s) போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களால் இலங்கையின் கடன் மதிப்பீடுகள் ஒரே நேரத்தில் பல படிகளால் மேம்படுத்தப்பட்டன.

மொத்தத்தில் இந்த முன்னேற்றங்கள் படிப்படியாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சி, வேலை உருவாக்கம் மற்றும் ஊதிய முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய காரணிகளாக உள்ள சர்வதேச நிதிப் பரிமாற்ற செலவுகளைக் குறைக்கின்றன.

மறுபுறம், பொருளாதார நெருக்கடியானது பலரை, குறிப்பாக சமூகத்தின் மிக வலுவற்ற பிரிவினரைத் தொடர்ந்து பாதிக்கிறது.​

இந்த நெருக்கடி வாழ்க்கைச் செலவில் குறிப்பிடத்தக்க  உயர்வுக்கு வழிவகுத்ததுடன் பணவீக்கம் 2022 இல் 70% வரை உயர்ந்திருந்தது.

பணவீக்கம் குறைந்தாலும், விலை மட்டம் உயர்ந்தே உள்ளது. மேலும் சம்பள வளர்ச்சி அதற்கேற்ற வேகத்தில் இல்லை.

இதனால் வாழ்க்கைத் தரம் குறைவடைகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உண்மையான சம்பளம் கணிசமாகக் குறைவடைந்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கம் அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இலக்கிடப்பட்ட பணக் கொடுப்பனவுகளை அதிகரித்ததுடன்,பயனாளிகளின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேவையுடையவர்களுக்கு பிற இலக்கிடப்பட்ட சமூக நன்மைகளையும் வழங்கியுள்ளது.

இருப்பினும், நாட்டில் பரவலாக காணப்படும் வறுமையை ஒழிக்க இவ்வகையான பணக் கொடுக்கனவுகள் நிலையானதொரு தீர்வாகாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு சிரமங்கள் மற்றும் சவால்கள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத குடிமக்களைக் கவனித்துக் கொள்வது மனிதாபிமானமிக்க அரசின் கடமையாகும்.

அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தில் உட்சேர்ப்பு மற்றும் தவிர்ப்பு சார்ந்த தவறுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அதனால்தான், செயன்முறையில் தொடர்ச்சியான மேம்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு மிகவும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில், அனைத்து இலங்கையர்களும் தங்கள் முழு திறனுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது வறுமை ஒழிப்புக்கான நிலையான தீர்வுக்கு அவசியமாகும்.

அனைத்து பிரசைகளும் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளைப் பெறும் வகையிலும் அதன் விளைவாக ஏற்படும் பலன்கள் சமூகத்தின் அனைத்து வகை மக்களாலும் அனுபவிக்கப்படும் வகையில் பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய முறையில் நடைபெற வேண்டும்.

வளர்ச்சி என்பது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும்  மேம்படுத்துவதற்கான வழிமுறையாக இல்லாவிட்டால் அதனால் சமூகத்திற்கு எந்த பெறுமானமும் கிடையாது.

பல தசாப்தங்களாக, பொருளாதார செயற்பாடு மற்றும் பொருளாதார ஆதாயங்கள் சிலரிடையே குவிந்துள்ளன.

சமீபத்திய (2019) வீட்டு வருமானம் மற்றும் செலவின கணக்கெடுப்பின்படி, வீட்டுச் செலவினங்களில் 47% ஆனது முதல் 20% குடும்பங்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

குடும்ப மட்டத்தில் வருமானத்தின் குவிப்புக்கு சான்றாக மேல் மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2023) 44% பங்களிக்கிறது.

இந்த சமத்துவமின்மை புவியியல் ரீதியாகவும் வெளிப்படுவதுடன், பொருளாதார வாய்ப்புகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் வகையில், பொருளாதாரத்தின் பெரியதொரு சனநாயக மயமாக்கலே முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையாக உள்ளது.

மக்கள் போராட்டம் மற்றும் கடந்த ஆண்டு தேர்தல்களில் சாதாரண மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்டினர்.

பொருளாதார உரிமைகளும் அவ்வாறே நிலைநாட்டப்படுவது இந்த வரவு செலவுத் திட்டத்தின் கோட்பாடாகும்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறிப்பிடத்தக்க வரையறைகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

2022 முதல் இலங்கை அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை நாம் நினைவூட்ட வேண்டியதில்லை. பெரும்பாலான நாடுகள் அரச கடன் மீளச்செலுத்த தவறியதனைத் தொடர்ந்து இழந்த தசாப்தம் என்று அழைக்கப்படும் ஒரு காலகட்டத்தை கடந்து செல்கின்றன.

இருப்பினும், ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைய முடிந்தது.

பின் விளைவுகள் இல்லாமல் அந்த ஒழுக்கத்தை எளிதாகவோ அல்லது விரைவாகவோ தளர்த்த முடியாது.

எனவே, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது அரசிறை ஒழுக்கம் பொருளாதார தொலைநோக்கு மற்றும் வழிகாட்டலுடன் தயாரிக்கப்பட்டது.

இவ் வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% முதன்மை அரசாங்க செலவின வரையறையாகும் என்ற முக்கிய அரசிறை விதியை பொது நிதி முகாமைத்துவச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டம் இந்தத் தேவையை முன்நிறுத்தியே​ தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அத்தகைய செலவினங்களிலிருந்து சிறந்த சமூக விளைவினைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, எமது வரையறுக்கப்பட்ட வரி நிதியளிக்கப்பட்ட வளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் நாம் கவனமாகவும் ஒழுக்கமாகவும் இருத்தல் வேண்டும்.

விரும்பிய அளவுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், எமது முக்கிய முன்னுரிமைகள் பலவற்றிற்கு நிதி ஒதுக்க முடிந்தது.

இவ்வாறு கவனம் செலுத்துகின்ற பகுதிகள் பாரம்பரிய வரவு செலவுத் திட்டங்களிலிருந்து வேறுபட்டவை என்றாலும், தற்பொழுது இடம்பெறும் முன்னெடுப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கியுள்ளோம்.

அதே நேரத்தில் இவற்றை எமது ஆணையுடன் இணைக்க தேவையான மாற்றங்களைச் செய்கிறோம்.

அஸ்வெசும திட்டம் மற்றும் பிற சமூக நலமுன்னுரிமைகளுக்கான எமது அதிகரித்த செலவினங்களில் இது தெளிவாகிறது.

இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு சாத்தியமான அதிகபட்ச அளவிற்கு, 2025 ஜூலை முதல் சிரேஷ்ட பிரசைகளுக்கான வட்டி மானியத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.

கடந்த காலங்களில் வழக்கமாக இந்த வரவு செலவுத்திட்டத்தில் துஷ்பிரயோகத்தைத் தடுக்க வலுவானதொரு பொறிமுறையை செயற்படுத்தவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த வரவு செலவுத்திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% ஒதுக்கியுள்ளோம்.

இது பொருளாதார வளர்ச்சியை முன்னகர்த்துவதற்கான அரசாங்கத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்றுறையை ஊக்குவித்தல், பொதுப்போக்குவரத்து, கிராமப்புற அபிவிருத்தி, விவசாய புத்தெழுச்சி, உள்ளூர் தொழில்முனைவு,  ஆராய்ச்சியினை வணிகமயமாக்கல் மற்றும் தடையற்ற உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி ஆகியவற்றிற்கும் வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ள.

இவை அனைத்திலும் மற்றும் பிற பொதுச் செலவினங்களிலும், முன்னுரிமை அளித்தல், இலக்கு வைத்தல், திறம்பட செயற்படுத்தல் மற்றும் பணத்திற்கான மதிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாம் அதி​களவு எச்சரிக்கையுடன் செயல்படுவோம் எனவே, பொதுமக்களிடமிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலிருந்தும் பொருளாதார மற்றும் சமூக பிரதிபலன்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மீட்சிக்கான இந்தப் பயணத்தினை நாம் தொடரும்போது, மேலும் அதிக​ அரசிறை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

செயற்திறன் அதிகரிப்பு வீண்விரயங்களையும் ஊழலையும் ஒழித்தல், சிறந்த முன்னுரிமை மற்றும் சிறந்த வரி நிர்வாகம் மூலம் உருவாகும் சேமிப்புக்களினால், மக்களின் முன்னுரிமைகளை நிறைவேற்ற, எமக்கு அதிக வளங்கள் கிடைக்கும்.

எனவே, ஒரு நாடாக நாம் பொறுமை காத்து, கூட்டாக ஒழுக்கத்துடனும் உறுதியுடனும் செயற்பட்டு நாம் முன்னோக்கிச் செல்லும் போது பிரதிபலன்கள் கிட்டும்.