உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுவதற்கு அவசர அவசரமாக காய்களை நகர்த்துகின்றது அரசு.

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை, தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 24ஆம் திகதி நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு வசதி செய்யும் விதத்தில் அவசர அவசரமாக காய்களை நாடாளுமன்றில் நகர்த்துகின்றது தேசிய மக்கள் சக்தி அரசு.
உள்ளூராட்சிசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
அது, நாளை 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்க வேண்டும்.
புதிய சட்ட மூலங்கள் தொடர்பான சட்ட ஒழுங்கு ஏற்பாடுகளின்படி அதுவே உரிய கால அவகாசமாகும்.
அப்படி கிடைக்கும் உயர் நீதிமன்றத்தின் முடிவை நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை விசேடமாகக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு தமது முதலாவது வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.
அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் விசேடமாகக் கூடுகின்றது.
அன்றைய தினமே அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவித்தல்களை விடுக்கும் அதிகாரம் அடுத்து வரும் நாள்களில் தேர்தல் ஆணையத்துக்கு வந்து விடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை தமிழ் - சிங்களப் புதுவருடம் முடிந்து அடுத்த 10 நாள்களில் - பெரும்பாலும் ஏப்ரல் 24ஆம் திகதி - நடத்தக் கூடியதான தீர்மானம் ஒன்றைத் தேர்தல் ஆணையம் எடுப்பதற்கு இடம் அளிக்கும் விதத்தில் இந்தச் சட்ட நிறைவேற்ற ஏற்பாடுகள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிகின்றது.
2023ஆம் ஆண்டு முற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டிய நிலையில் அந்தத் தேர்தல் நிலுவையில் உள்ளது.
அந்த வேட்புமனுக்களை இரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை ஏற்று, தேர்தலை நடத்துவதற்கு வசதி செய்யும் திருத்தச் சட்ட மூலமே தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, உயர் நீதிமன்ற ஆய்வின் பின்னர் அதன் தீர்ப்பை பெறுவதற்காகக் காத்திருக்கின்றது.
அந்தத் தீர்ப்பை நாளை 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் சபா நாயகருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைக்கக் கூடியதாக உயர் நீதிமன்றம் அனுப்ப வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேடமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய நேற்றைய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு அமைய பிரதமரினால் சபாநாய கரிடம் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அத்துடன், பெப்ரவரி 14ஆம் திகதி இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற் காக சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
