கிளிநொச்சியைச் சேர்ந்த யாழ். பல்கலைக் கழக மாணவன் கமலரூபனின் கலைப் படைப்புக்கள், பலரையும் கவர்ந்துள்ளன



கிளிநொச்சியைச் சேர்ந்த யாழ். பல்கலைக் கழக மாணவன் கமலரூபனின் கலைப் படைப்புக்கள், பலரையும் கவர்ந்துள்ளன
வடமாகாணத்தின் இளைஞர்கள் மத்தியில் கலைதுறை சார்ந்த ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அண்மைக் காலங்களாக ஓவியம், சிற்பம் போன்ற துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பு, படைப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் கமலரூபன் உருவாக்கியுள்ள கலைப் படைப்புக்கள், அவருடைய கலைத்துறை சார்ந்த செயற்பாடுகள் பலரையும் கவர்ந்துள்ளன.
கமலரூபன் ஒரு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான ஓவியங்கள், சிற்பங்கள். கலைப் படைப்புக்களைத் தனது பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளின் போதும், அதே நேரம் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்கன் போதும் உருவாக்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
கிளிநொச்சியில் மிகவும் சாதாரண பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் கமலரூபன். அவரின் இரு அண்ணன்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில் கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று யாழ். பல்கலைக்கழகம் சென்றார்.
பல்கலைக்கழகத்தில் பல பாட தெரிவுகள் இருந்த போதிலும் கலை துறையில் பல பாடங்கள் இருந்த போதும் இந்த பாடத்தை தெரிவு செய்து தனது அடையாளத்தை மெல்ல மெல்ல உருவாக்கி வருகிறார் கமலரூபன்.
கமலரூபனின் கலை படைப்புக்கள் ஆழமான கருத்துக்களை நேர்த்தியாக இலகுவாக வெளிப்படுத்த கூடியதாக காணப்படுகின்றன.
அதேநேரம் கலை துறையில் பாரம்பரியமாகப் பின்பற்றும் செயற்பாடுகளில் மட்டும் நின்றுவிடாது புதிய தொழில் நுட்பங்களையும் தனது படைப்புகளில் உட்புகுத்தி அதிலும் வெற்றி கண்டுள்ளார்.
கமலரூபனால் வரையப்பட்ட சில ஓவியங்கள் செதுக்கப்பட்ட சிலைகள் தத்ரூபமானவையாகக் காணப்படுவதுடன் பிரதி இடக் கூடிய நபரைக் கண்முன் நிறுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு பல திறமைகளைக் கொண்ட கமலரூபன் வடமாகாணத்தில் உள்ள கலைப் படப்பாளர்களுக்கு ஒரு குறியீடாகவும் கலைத்துறை மீதான ஆர்வத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகமாக இருக்கின்றார்.
தற்போது சிறிய அளவிலான தொழில் முயற்சி ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்திருக்கும் கமலரூபன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தனது கலைப்படைப்புகளை உள்ளூரிலும் வெளிநாடுகளுக்கும் சந்தைப்படுத்தி வருகிறார்.
கலைத்துறை சார்ந்த படைப்புக்களுக்கான சந்தை வாய்ப்புகள் என்பது எமது நாட்டில் குறைவாக காணப்படுகின்றது.
பலரது கலைப்படைப்புக்கள் தற்போது வீதிகளிலே காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் கலைத்துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கான நவீன சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்கப்படுத்துதல் செயற்பாடுகளை அரசு மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் கமலரூபன் போன்ற பல இளைஞர்கள் கலைத் துறையில் சாதிப்பதற்கான பயணங்களில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் பயணிப்பார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
