லசந்த கொலை வழக்கு, சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை

2 months ago



ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு அனுப்பியுள்ள் கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்கஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மா அதிபர் எடுத்த நடவடிக்கை குறித்தும் அவர் தனது கவலையை வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் நேற்று (05) ஊடகவியலாளர்கள் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பிய போது, சட்டமா அதிபரின் பரிந்துரை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, எதிர்காலத்தில் தொடர்புடைய தீர்மானம் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று பேரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தனது சட்ட ரீதியான கருத்தை வழங்கியிருந்தார்.

ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இது கூறப்பட்டுள்ளது.

அஹிம்சா விக்ரமதுங்க பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தை கீழே காணலாம்.



அண்மைய பதிவுகள்