முல்லைத்தீவில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் ஆர். பரணீகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
வயல் நிலங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருக்கிறதா? என்பதை அவதானித்தே, பாதிப்பு நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்ய முடியும்.
தற்போது மழைவீழ்ச்சி அளவு குறைந்திருப்பதால் வயல் நிலங்களை மூடியிருக்கின்ற வெள்ளம் படிப்படியாக குறைவடைகின்ற போது, தற்போது எதிர்பார்க்கப்படுகின்ற பாதிப்பு நிலைமையை விட, பாதிப்பு நிலைமைகள் குறையக்கூடும் என நம்புகிறோம்"- என்றார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளையாவது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கு குறிப்பிட்டளவு நாட்கள் தேவை என திணைக்கள அதிகாரிகள் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.
ஆனால், கூடிய விரைவில் விவசாய பாதிப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை உடனடியாக வழங்க உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
