புத்தளம், சிலாபம், நீர்கொழும்பில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.-- எம்.பி சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.
அதேபோல் கொழும்பு, கறுவாத் தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.
பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை." -இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை நடைபெற்ற பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
தகுதி வாய்ந்த தரப்பினருக்கு நலன்புரிக் கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை.
கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
இதனால் நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.
நலன்புரிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்குக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன.
ஆகவே, நலன் புரித்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்துக்காக மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மலையக மக்களின் வாழ்க்கை என்றும் பாதிக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது.
உலக வரைபடத்தில் இன்றும் லயன் அறைகளில் வாழும் மக்கள் சமூகமாகவே எம் மலையகச் சகோதரர்கள் உள்ளார்கள்.
100-200 மீற்றர் லயன் அறை தொகுதியில் தார் பூசிய தகரக் கூரைகளினால் அமைக்கப்பட்ட அறைகளில்தான் இன்றும் எம் மலையக மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்கின்றார்கள்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு இந்த மக்களுக்குத் தரமான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தால் இந்த அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும்.
இந்த மக்களுக்காக எடுக்கும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது.
இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11 ஆயிரத்து 790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது.
மிகுதி 26 ஆயிரத்து 209 பேருக்கு இன்றும் அந்தத் தொகை வழங்கப்படவில்லை.
மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார். யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியைச் செலவு செய்துள்ளார்கள்.
ஆகவே, இந்த அரசு இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளமை கவனத்துக்குரியது.
இந்த அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசில் பங்குதாரர்களாக உள்ளனர்.
ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
தீர்வுத் திட்டத்தில் அரசு சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள்.
ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.
அரசு சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்கச் சென்ற பெண் மிகக் கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? இந்த விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் தமக்குக் காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலன்டனில் உள்ள ஒருவர் தன்னைத் தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.
அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர்.
பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்புப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள். இதுதான் உண்மை.
1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப் பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
அதேபோல் 1983 ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2 ஆயிரம் எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள்." - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
