முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் இ. சந்திரசேகர் தெரிவிப்பு

4 months ago



முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தின் போதும் இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.

மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.

அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.