ஜனாதிபதித் தேர்தலின்போது நான் யாருக்கு சார்பாகவும் நடக்கவில்லை, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்.



ஜனாதிபதி தேர்தலின்போது நான் யாருக்காகவும் யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பதே எனது கருத்தாக இருந்தது என முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து கதைத்த போது இன வாதமற்ற இலங்கையை, இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவதற்காக தான் பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.
அந்த வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தனது உறுதிமொழியை தொடர்ச்சியாக இனவாதம் அற்ற நாடாக இலங்கை மாறுவதற்கும் இலஞ்ச ஊழல் அற்ற நாடாக இலங்கையை கொண்டு வருவதற்கும் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நினைவில் வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதை நான் அவரிடம் கோரிக்கையாக முன் வைக்கிறேன்.
ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாருக்காகவும் யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பதே எனது கருத்தாக இருந்தது.
பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
கடந்த 2 வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்னைகளுக்கு தீர்வை முன்வைத்தேன்.
முல்லைத்தீவிலும் ஏற்பட்ட சில பிரச்னைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொடுத்தேன்.
மக்களின் பிரச்னைகளை நான் அவரிடம் முன்வைத்த போது சில விடயங்களை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தார்.
அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அதேபோல் அண்மையில் மன்னாருக்கு வருகின்றபோது எனது வீட்டுக்கு வரவுள்ளதாக கூறியிருந்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடங்கலாக பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை தந்ததன் அடிப்படையில் இங்குள்ள மக்களின் பிரச்னைகளை கலந்தாலோசிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது. அதன் அடிப்படையில் அவர் இங்கு வந்து சென்றிருந்தார்.
இந்நிலையில், அண்மைக் காலமாக என் மீது சிலர் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்-என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
