வடக்கில் மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தெரிவு செய்யாமையால் வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தவர் நியமனம்

3 months ago



வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தெரிவு செய்யாதமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். கல்விக் கண்காட்சி 2025 திறப்பு விழா நேற்றுச் சனிக்கிழமை காலை தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதில், உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால், இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கிறது.

அதனைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது.

பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வியே. இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடர வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.



அண்மைய பதிவுகள்