கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையில் பொலிஸார் அமைதியை ஏற்படுத்தினர்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையில் அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிஸார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தினர்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத் தரப்புகள் முனைந்தபோது குறித்த அமைதியின்மை ஏற்பட்டது.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தரப்பினர் துயிலுமில்லத்தின் கட்டுப்பாட்டை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
நேற்று கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாகத் தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஒரு குழுவினர் அங்கு சென்று குழப்பத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுடன் அவர்கள் முரண்பட்டனர்.
அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் அங்கு சென்றனர்.
அப்பகுதியில் கூட்டமாக நிற்கவேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர்.
படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.
இதேவேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில் -
மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இன்று சிறிதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர்.
தொடர்ந்தும் சிறிதரனின் அரசியலுக்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.
சிறிதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார்.
அரசியலுக்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.
அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
