இலங்கை அமைச்சர்களுக்கு கடந்த அரசைக் காட்டிலும் இரட்டிப்புச் சலுகைகளை வழங்க தீர்மானம்.--எம்.பி டி.வி. சானக தெரிவிப்பு

3 months ago



அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகள், சலுகைகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு கடந்த அரசாங்கங்களை காட்டிலும் இரட்டிப்புச் சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக் கையில் -

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளை குறைப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் சலுகைகளை அதிகரித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சருக்கு 3 வாகனங்களும், அவரது சேவையாளர்களுக்கு 5 வாகனங்களும் என்ற அடிப்படையில் 8 வாகனங்களும், இராஜாங்க அமைச்சர்களுக்கு 3 வாகனங்களும், அவர்களின் சேவையாளர்களுக்கு 4 வாகனங்களும் என்ற அடிப்படையில் 7 வாகனங்களும் வழங்கப்பட்டன.

இந்த அரசாங்கம் அமைச்சரவை அமைச்சர்களுக்கு 10 வாகனங்களையும், பிரதி அமைச்சர்களுக்கு 8 வாகனங்களையும் வழங்கும் வகையில் சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சு மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைகளுக்கு 414 வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வாகனம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்பாகவும், பின்னாலும் வாகனம் செல்ல வேண்டிய தேவை கிடையாது என்று குறிப்பிட்டார்.

தற்போது வானத்தில் பறப்பதற்கா இத்தனை வாகனங்கள் வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

மேலும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு நகரில் மிகவும் முக்கியமான கட்டடங்களை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டடங்கள் எவையென அவர் குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீட்டின் மாத வாடகை மதிப்பு 46 இலட்சம் ரூபா என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

வாடகை கட்டணத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு அனுப்புங்கள். வாடகை கட்டணத்தைச் செலுத்துவதா அல்லது வீட் டில் இருந்து வெளியேறுவதா என்பதை அவர் தீர்மானிப்பார்- என்றார். 

அண்மைய பதிவுகள்